தமிழ் ஈழம் என்ற பேச்சுக்கு இடமில்லை பேராசிரியர் பத்மநாதன்

நவநாஜிய பாணியிலே பல அரசாங்க துறைகள் இணைந்து பலம் பொருந்தியவர்கள், செல்வாக்கு பொருந்தியவர்களுடன் இணைந்து அவர்கள் எங்கள் இருப்புகளை குடித்தொகையை மாற்றியமைப்பதற்கும் முயல்கின்றனர் என தெரிவித்துள்ள பேராசிரியர் பத்மநாதன் மீண்டும் எங்களின் தேசிய உரிமையை எழுச்சியை வளர்க்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.

பேராசிரியர் பத்மநாதனின் ‘ஒரு மறைந்துபோன நாகரீகத்தின் தரிசனம் – ஆதி கால யாழ்ப்பாணம்’ நூல் வெளியீட்டு நிகழ்வு கொழும்பு தமிழ் சங்கத்தில் இடம்பெற்றவேளை ஆற்றிய உரையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அத்தோடு அவர்,

“நாங்கள் மீண்டும் பாராளுமன்ற ரீதியாகவும் வெளிப்புறமாகவும் எங்களுடைய உரிமைகளை நிலைநாட்டவேண்டும்.

ஒன்று மட்டும் சொல்கின்றேன்… தமிழ் ஈழம் என்ற பேச்சுக்கு இடமில்லை.

எந்த ஒரு நாடும் ஆதரிக்காது. இந்த யுகத்தில் ஒருவராலும் அமைக்க முடியாது.

மற்றவற்றை இறைமை அதிகாரம், சுயநிர்ணய உரிமை இவற்றைதான் பெற்றுக்கொள்ள முடியும். அதுவும் பேச்சுவார்த்தை மூலம் அவசியம்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அவர் தனது உரையின்போது மேலும் கூறுகையில், “தமிழ் தேசியத்தின் உற்பத்திக்கு அடிநாதமான மொழிவழக்கும் இடையறாத நிலப்பரப்பும் கிறிஸ்துவுக்கு முதல் நூற்றாண்டிலேயே உருவாகிவிட்டது.

இலங்கை தமிழர்களினதும் சிங்களவர்களினதும் முன்னோர்கள் நாகர்களின் வழிமுறை சந்ததியினரே.

19ஆம் நூற்றாண்டில் சுதந்திரம் கிடைத்த பின்னர் சிங்கள தலைவர்கள், படித்தவர்கள், ஸ்டேட் கவுன்சிலில் இருந்தவர்கள், பக்குவமான குடும்பத்திலிருந்து வந்தவர்கள், தமிழர்கள் ஒரு தேசிய இனம் நாட்டில் ஒரு சமஸ்டி முறையிலான ஆட்சி அமையவேண்டும் என்றார்கள்.

நாங்கள் என்ன செய்தோம் எட்டியும் பார்க்கவில்லை.

இப்போது என்ன சொல்கின்றோம்… ஒஸ்லோ பிரகடனத்தில் எழுதப்பட்டுள்ளது என்கின்றோம்.

இதனை நான் அவருக்கு பிரச்சாரமாக சொல்லவில்லை… உண்மையை சொல்லவேண்டும்.

எங்கள் பிரதிநிதிகள் பௌத்த விகாராதிபதியொருவருக்கு ஆயிரம் ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளமை பற்றி ஜனாதிபதியிடம் முறையிட்டவேளை அவர் அந்த திணைக்கள தலைவருக்கு சொன்னார், எனக்கு நீர் இந்த வரலாறு படிப்பிக்க தேவையில்லை, புராதன காலத்தில் வடகிழக்கில் உள்ள பௌத்த நிறுவனங்களின் நிலங்கள் எல்லாம் தமிழருக்கு சொந்தமானவை. அந்தளவுக்கு நிலைமை மாறியுள்ளது.

இனவாதிகளை பற்றி நான் சொல்லவில்லை. இவர் இனவாதம் பேசாதவர். ஆனால், சில விடயங்களை செய்வதற்கு துணிச்சல் அற்றவர்; ஆற்றல் அற்றவர்.

எங்களுடைய கோமாளித்தனம் தொடர்ந்து வந்ததனால் எங்கள் இருப்பிற்கே பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

இந்திய இலங்கை உடன்படிக்கையில் சொல்லப்பட்டவற்றை மீறிவிட்டனர் ஜனாதிபதியை கேளாமல் நீதிமன்றத்தை நிராகரித்தும் அவர்கள் பல விடயங்களை செய்கின்றார்கள்.

எங்கட ஆட்கள் 15 இலட்சம் பேர்தான் இருக்கின்றார்கள். ஆனால் இருப்பது 17 கட்சி மலையகத்தில் உள்ள கட்சிகளுடன் சேர்த்தால் 24 கட்சி.

எங்கே போகப்போகின்றோம்!

நாங்கள் தற்போது என்ன செய்யவேண்டும் என்றால், இவற்றை பாதுகாப்பதற்கு என்னென்ன நிறுவனங்கள் உள்ளனவோ தற்போதைய அரசமைப்பின்படி என்னென்ன நிறுவனங்களுக்கு என்ன அதிகாரம் உள்ளதோ அவற்றை பயன்படுத்தி இயக்கவேண்டும்.

அவற்றின் மூலம் இந்த ஆவணங்களை தேடவேண்டும், தேடி பாதுகாக்க வேண்டும், அருங்காட்சியகங்களை அமைக்கவேண்டும், காட்சிப்படுத்த வேண்டும், இவ்வாறான நூல்களை எல்லாம் மக்களுக்கு வழங்கி விளங்கப்படுத்தி மீண்டும் எங்களின் தேசிய உரிமையை, எழுச்சியை வளர்க்கவேண்டும்.

தேசிய உணர்ச்சி எனும்போது நான் அரசியல் பேசுகின்றேன் என எவரும் சொல்லக்கூடாது.

சர்வதேச ரீதியாகவும் சிங்கள மன்னர்களின் ஆட்சி வழக்கின்படியும் தமிழ் மக்கள் அவர்களின் அரசுகள், பிராந்தியங்கள் தனித்துவமானவை. அரசுரிமையில் இறைமையில் பங்குள்ளவை என்பது ஒப்புக்கொள்ளப்பட்ட விடயம்.

இது பற்றி எங்களுடைய துறையில் உள்ளவர்கள்தான் அடக்கி வாசிக்கின்றார்கள். உள்ளதை சொல்வதற்கு பயப்படக்கூடாது.

நாங்கள் மீண்டும் பாராளுமன்ற ரீதியாகவும் வெளிப்புறமாகவும் எங்களுடைய உரிமைகளை நிலைநாட்டவேண்டும்.

ஒன்று மட்டும் சொல்கின்றேன்… தமிழ் ஈழம் என்ற பேச்சுக்கு இடமில்லை.

எந்த ஒரு நாடும் ஆதரிக்காது.

இந்த யுகத்தில் ஒருவராலும் அமைக்க முடியாது.

மற்றவற்றை இறைமை அதிகாரம், சுயநிர்ணய உரிமை இவற்றைதான் பெற்றுக்கொள்ள முடியும். அதுவும் பேச்சுவார்த்தை மூலம் அவசியம். ஏனென்றால், நிலைமை ஒன்றும் நடக்காவிட்டால் 22ஆம் ஆண்டை பற்றித்தான் சிந்திக்கவேண்டும்” என தெரிவித்தார்.

Related posts