முஸ்லிம்களின் காலில் விழுந்து மன்றாடினாலும்

கொவிட் தாக்கத்தினால் உயிரிழந்த முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் பலவந்தமான முறையில் தகனம் செய்யப்பட்டமைக்கு மன்னிப்புக் கோருவது வெறும் கண் துடைப்பாகும்.ஒவ்வொரு முஸ்லிம்களின் காலில் விழுந்து மன்றாடினாலும் மன்னிக்க முடியாது.எமது மக்கள் மிக தெளிவாக உள்ளார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (24) இடம்பெற்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

கொவிட் பெருந்தொற்று தாக்கத்தில் உயிரிழந்த முஸ்லிம் சமூகத்தின் உடல்கள் பலவந்தமான முறையில் தகனம் செய்யப்பட்டமையால் முஸ்லிம் சமூகத்தின் மனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதற்கு மன்னிப்பு கோரும் வகையில் அமைச்சர்களான அலி சப்ரி,விஜயதாஸ ராஜபக்ஷ மற்றும் ஜீவன் தொண்டமான் ஆகியோர் கூட்டாக சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை தற்போது பரவலாக பேசப்படுகிறது.

தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் இவ்வாறான அறிவிப்புக்களை விடுத்து மக்களை குழப்பத்துக்குள் தள்ளும் நாடகங்கள் அரங்கேற்றப்படுகின்றன.இது வெறும் கண்துடைப்பு என்பதை அனைவரும் விளங்கிக் கொள்ள வேண்டும்.மன்னிப்பு கோரி அமைச்சரவை பத்திரம் சமர்ப்பித்த இந்த மூன்று அமைச்சர்களும் அன்று அரசாங்கத்தின் பங்காளிகளாக இருந்தார்கள்.

தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் மக்களை ஏமாற்றுவதற்காக இவ்வாறு செயற்படுகிறார்கள்.முஸ்லிம் சமூகம் மிக் தெளிவாக உள்ளது என்பதை இவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.

கொவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களில் 276 முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் பலவந்தமான முறையில் தகனம் செய்யப்பட்டுள்ளன.இதனால் ஒட்டுமொத்த முஸ்லிம்களும் துடித்தார்கள்.கண்ணீர் சிந்தி கதறி அழுதார்கள்.அக்காலப்பகுதியில் ஒட்டுமொத்த முஸ்லிம்களும் சொல்லனா துயரங்களை எதிர்கொண்டார்கள்.

பவந்தமான தகனம் என்ற இழிவான செயற்பாட்டை அரசாங்கம் கடுமையாக முன்னெடுத்தது.கோட்டபய ராஜபக்ஷ அரசாங்கம் மனசாட்சியில்லாமல் செயற்பட்டது.நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி மற்றும் அவரது அமைச்சின் உறுப்பினர்கள் ஜனாஸா எரிப்புக்கு இணக்கம் தெரிவித்தார்கள்.ஆகவே தற்போது மன்னிப்பு கோருவது எம்மை ஏமாற்றும் செயற்பாடு.

பலவந்தமான முறையில் ஜனாஸாக்கள் தகனம் செய்யப்பட்டமை தொடர்பில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள போதும் எவருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

ஜனாஸா தகனத்துக்கும் ராஜபக்ஷர்களுக்கும் எவ்வித தொடர்புமில்லை என்பதை காண்பிடிக்கும் வகையில் ஜனாதிபதி அண்மையில் சபையில் உரையாற்றினார்.தேர்தலுக்காக எமது சமூகத்தை ஏமாற்றுவதை உடனடியாக நிறுத்த வேண்டும்.

இலங்கையில் வாழும் ஒவ்வொரு முஸ்லிம்களின் காலில் விழுந்து மன்றாடி மன்னிப்பு கோரினாலும் மன்னிக்க முடியாத அளவுக்கு இந்த சம்பவம் காணப்படுகிறது.

தேர்தலுக்காகவே பொய்யான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகிறது.சிங்களவர்களால் தெரிவு செய்யப்பட்டேன் என்று ஆணவத்துடன் செயற்பட்ட ஜனாதிபதியை சிங்கள மக்களே விரட்டியடித்தார்கள்.பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்க வேண்டும் என்றார்.

Related posts