ரஜினி எனக்கு துரோணாச்சாரியார் போன்றவர்: உபேந்திரா

பிரபல கன்னட நடிகர் உபேந்திரா, தமிழில் விஷாலின், ‘சத்யம்’ படத்தில் நடித்திருந்தார். அடுத்து அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ படத்தில் நடிக்கிறார். இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் ரஜினிகாந்துடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்த உபேந்திரா, பின்னர் அதை நீக்கிவிட்டார்.

இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், “25 வருடத்துக்கு முன் ரஜினி சாரை சந்தித்தேன். நான் மதிக்கும் அவரை இப்போது மீண்டும் சந்தித்ததில் மகிழ்ச்சி. அவருடன் இணைந்து நடிப்பேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை. ரஜினி சார் எனக்கு துரோணாச்சாரியார் மாதிரி. பல ஆண்டுகளாகத் தொழில் ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் அவரிடம் அதிகம் கற்றுக்கொண்டேன். ‘கூலி’ படத்தில் நான் இணைந்துள்ளது பற்றி தயாரிப்பு தரப்புதான் அறிவிக்க வேண்டும். அந்தப் படத்தின் ‘லுக் டெஸ்ட்’டுக்கு சென்றேன். திருப்தியாக வந்ததில் மகிழ்ச்சி. நான் வாழ்நாள் முழுவதும் போற்றும் கேரக்டராக அது இருக்கும்” என்றார்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் சத்யராஜ், ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடிக்க இருக்கும் நிலையில் மேலும் சில பிற மொழி நடிகர்களும் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

Related posts