சினிமாவில் அதிகார மையம் என்று எதுவும் இல்லை

ஹேமா குழு பரிந்துரைகளை நான் வரவேற்கிறேன். தவறு செய்தவர்களுக்கான தண்டனையை நீதிமன்றம் உறுதி செய்யும். அதேவேளையில், சினிமாவில் அதிகார மையம் என்று எதுவும் இல்லை. சினிமா வாழ வேண்டும்.” என்று மலையாள நடிகர் மம்மூட்டி தெரிவித்துள்ளார்.

மலையாள திரையுலகில் நடைபெறும் பாலியல் சுரண்டல்களை வெளிக்கொண்டு வந்தது ஹேமா கமிட்டி அறிக்கை. மலையாள நடிகைகள் பட வாய்ப்புக்காக பல முறை பாலியல் துன்புறுத்தலை எதிர்கொண்டனர் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் அடுத்தக்கட்ட நகர்வாக பல நடிகைகளும் வெளியில் வந்து தாங்கள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து வெளிப்படையாக பேசி வருகின்றனர்.

அதன் பேரில் மலையாள நடிகர் சித்திக், இடவேள பாபு, கொல்லம் எம்.எல்.ஏ முகேஷ், ஜெயசூர்யா, மணியம் பிள்ளை ராஜு உள்ளிட்ட நடிகர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், நடிகர்கள் மோகன்லால், ஜெயசூர்யாவைத் தொடர்ந்து நடிகர் மம்மூட்டி இவ்விவகாரத்தில் மவுனம் கலைத்துள்ளார்.

இது தொடர்பாக மம்மூட்டி தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: ஹேமா குழு பரிந்துரைகளை நான் முழுமனதாக வரவேற்கிறேன். அதில் கூறப்பட்டுள்ள தீர்வுகளை ஆதரிக்கிறேன். சினிமாவில் உள்ள அனைத்து சங்கங்களும் ஒன்றிணைந்து இதனை அமல்படுத்த வேண்டிய தருணம் இது. இப்போது எழுப்பப்பட்டுள்ள புகாரின் பேரில் காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. அவர்கள் நேர்மையாக விசாரிக்கட்டும். நீதிபதி ஹேமா குழு அறிக்கையின் முழு விவரம் நீதிமன்றத்திடம் உள்ளது. அதன்படி நீதிமன்றம் தண்டனைகளை தீர்மானிக்கட்டும்.

சினிமாவில் எந்தவொரு அதிகார மையமும் இல்லை. சினிமா அதுபோன்ற அதிகார மையங்கள் இயங்கக்கூடிய களமும் இல்லை. சட்ட சிக்கல்கள் இருந்தால் நடைமுறைக்கு உகந்த ஹேமா குழு பரிந்துரைகளை அமலுக்குக் கொண்டு வரலாம். சினிமா வாழ வேண்டும்.

அம்மா சங்கமும் அதன் தலைமையும் தான் இவ்விவகாரத்தில் முதலில் கருத்து தெரிவிக்க வேண்டும். அதன் பின்னரே உறுப்பினரான நான் எனது கருத்தைத் தெரிவிக்க வேண்டும். அதனாலேயே நான் இவ்வளவு நாள் இதுபற்றி பேசவில்லை. இவ்வாறு மம்மூட்டி கூறியுள்ளார்.
முன்னதாக நேற்று (சனிக்கிழமை) “நான் எங்கும் ஓடிப்போகவில்லை. மலையாள திரையுலகை அழித்துவிடாதீர்கள். குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க வேண்டும், அதே சமயம் நம் திரையுலகம் பாதுகாக்கப்பட வேண்டும்.” என நடிகரும், ‘அம்மா’ அமைப்பின் முன்னாள் தலைவருமான மோகன்லால் தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை நடிகர் ஜெயசூர்யா இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட அறிக்கையில், “என் மீது இரண்டு போலியான பாலியல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதனால் நானும், என் குடும்பத்தினரும் நொறுங்கிப்போயுள்ளோம். இதனை சட்டபூர்வமாக எதிர்கொள்வது என நான் முடிவு செய்துள்ளேன். போலியான பாலியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வது என்பதும் பாலியல் துன்புறுத்தலுக்கு நிகரான வலி தான்.” என்று குறிப்பிட்டிருந்தார்.

Related posts