வசந்த முதலிகே உள்ளிட்ட 18 பேர் தொடர்பில் நீதிமன்றின் அறிவிப்பு

கடந்த போராட்ட காலத்தில் சட்டவிரோதமாக மக்களை ஒன்றுதிரட்டி, பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டதாக சந்தேகத்தின் போரில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே, கல்வெவ சிறிதம்ம தேரர் உள்ளிட்ட 18 சந்தேகநபர்கள் தொடர்பான விசாரணைகளுக்கு சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற்றுள்ளதாக பொலிஸார் இன்று (21) கொழும்பு நீதவான் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

இந்த முறைப்பாடு இன்று கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே முன்னிலையில் அழைக்கப்பட்டதுடன், வசந்த முதலிகே உள்ளிட்ட சந்தேக நபர்கள் நீதிமன்றில் முன்னிலையாகினர்.

இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைக் கோப்புகள் ஆலோசனைக்காக சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கறுவாத்தோட்டம் பொலிஸார் தெரிவித்தனர்.

சட்டமா அதிபரின் ஆலோசனையின் பின்னர் மேலதிக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.

அதன்பிறகு, சம்பந்தப்பட்ட முறைப்பாட்டை பெப்ரவரி 10ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிமன்றம் உத்தரவிட்டது.

Related posts