மாமல்லபுரத்தில் அமைந்துள்ள தலசயன பெருமாள் கோயிலில் திரைப்பட நடிகர் சிவகார்த்திகேயன், தனது பிறந்தநாளை முன்னிட்டு குடும்பத்தினருடன் இன்று சுவாமி தரிசனம் செய்தார்.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ தலசயன பெருமாள் கோயில் 108 திவ்ய தேசங்களில் 63-வது தலமாக விளங்கி வருகிறது.
இங்கு, உள்ளூர் மற்றும் வெளிநாட்டிலிருந்து வரும் ஏராளமான சுற்றுலா பயணிகள் நாள்தோறும் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், திரைப்பட நடிகர் சிவகார்த்திகேயன் தனது பிறந்தநாளை முன்னிட்டு, குடும்பத்துடன் தலசயனப் பெருமாள் கோயிலுக்கு சுவாமி தரிசனத்துக்காக வந்தார்.
மேலும், கோயில் வளாகத்தில் உள்ள கருடாழ்வார் சந்நிதியில் பஞ்சமியை முன்னிட்டு மனைவியுடன் சிறப்பு பூஜை செய்தார்.
பிறகு, தலசயன பெருமாள், நிலமங்கை தாயார் சந்நிதியில் சுவாமி தரிசனம் செய்தார்.
அப்போது, கோயிலுக்கு வந்திருந்த பக்தர்கள் முண்டியடித்து கொண்டு அவருடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
மேலும், அங்கு வந்த நரிக்குறவ பெண்களுடன் சிவகார்த்திகேயன் செல்பி எடுத்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில், கோயில் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.