உள்நாட்டு ஆயுத மோதலின் போது இடம்பெற்ற குற்றங்களிற்கு நீதியை வழங்குவதற்கும் அவற்றிற்கு முடிவை காண்பதற்கும் உதவும் என்பதால்,இலங்கை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ரோம் சட்டத்தை ஏற்றுக்கொள்வது அவசியம் என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது
இலங்கை ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்துடன் இணைந்து செயற்படவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
நீதியமைச்சர் ஹர்சனநாணயக்காரவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் சர்வதேச மன்னிப்புச்சபையின் தென்னாசியாவிற்கான பிராந்திய இயக்குநர் ஸ்மிரிதி சிங் இதனை தெரிவித்துள்ளார்
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் அமர்வில் இலங்கை எடுத்துள்ள நிலைப்பாடு குறித்து ஆழ்ந்த கரிசனை கொண்டுள்ளோம்.
குறிப்பாக இலங்கையில் இடம்பெற்ற பாரிய மனித உரிமை மீறல்கள்,அல்லது சர்வதேச மனித மனிதாபிமான சட்டங்கள் பாரிய அளவில் மீறப்பட்டமை தொடர்பில் பொறுப்புக்கூறும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக தகவல் மற்றும் ஆதாரங்களை சேகரித்து, ஒருங்கிணைத்து,பகுப்பாய்வு செய்து பாதுகாத்தலிற்கான ஆணையை கொண்டுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறும் திட்டத்தை நிராகரித்தமை குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம்.
இலங்கையின் உள்நாட்டு மோதலின் போது பாதிக்கப்பட்ட இலங்கையர்களிற்கு நீதியை உறுதி செய்வதற்காக இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறும் திட்டம் உட்பட ஆணையாளர் அலுவலகத்துடன் ஆக்கபூர்வமான விதத்தில் இணைந்து செயற்படவேண்டும்.
ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக இலங்கைக்கு வருவதற்கு அனுமதிக்கவேண்டும்.
உள்நாட்டு ஆயுத மோதலின் போது இடம்பெற்ற குற்றங்களிற்கு நீதியை வழங்குவதற்கும் அவற்றிற்கு முடிவை காண்பதற்கும் உதவும் என்பதால்,இலங்கை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ரோம் சட்டத்தை ஏற்றுக்கொள்வது அவசியம்.
இலங்கை இன்னமும் சர்வதேச குற்றங்களை அதன் உள்நாட்டு சட்ட கட்டமைப்பிற்குள் ஏற்றுக்கொள்ளவில்லை.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தவர்கள் ,சட்டத்தரணிகள்,பத்திரிகையாளர்கள் , செயற்பாட்டாளர்கள்,நீதியை நாடும்போது துன்புறுத்தலை எதிர்கொள்வது உடனடியாக நிறுத்தப்படுவதை உறுதி செய்யவேண்டும்.