புதிய சொகுசு பஸ் சேவை இடைநிறுத்தம் !

கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்திலிருந்து கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் மற்றும் மாகும்புர பல்வகை போக்குவரத்து நிலையத்துக்கு இடையில் போக்குவரத்து சேவைக்காக ஆரம்பிக்கப்பட்ட புதிய சொகுசு பஸ் சேவை திங்கட்கிழமை (19) முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

கடந்த 15 ஆம் திகதி AirPort Terminal Shuttle Service என்ற பெயரில் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ரூபசிங்கவால், கட்டுநாயக்க விமான நிலையத்தில் இந்த புதிய சொகுசு பஸ் சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த 16 ஆம் திகதி விமான நிலையம் – கோட்டை பஸ் ஊழியர் சங்கம் புதிய சொகுசு பஸ் சேவைக்கு எதிராக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டது.

அத்தோடு இது தொடர்பில் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சு மற்றும் தேர்தல் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு பதிவு செய்தது.

இந்த வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு வாடகை வாகன சங்கமும் ஆதரவை வழங்கி இருந்தது.

இந்நிலையில், முறைப்பாடுகளை பரிசீலித்து ஆரம்பிக்கப்பட்டு 4 நாட்கள் மாத்திரம் சேவையில் ஈடுப்பட்ட விமான நிலைய புதிய சொகுசு பஸ் போக்குவரத்து சேவையை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இடைநிறுத்தப்பட்டுள்ள சொகுசு பஸ் போக்குவரத்து சேவைக்கு பதிலாக, விமான நிலையத்திலிருந்து கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் மற்றும் மாகும்புர பல்வகை போக்குவரத்து நிலையத்துக்கு தொழிற்சங்கத்தின் பத்து பஸ்கள் சேவைக்கு ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக விமான நிலைய – கோட்டை பஸ் ஊழியர் சங்கத்தின் தலைவர் இந்திக்க குணசேகர தெரிவித்துள்ளார்.

Related posts