அரசியல் வாக்குறுதிகளை நிறைவேற்றினால்

சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாவது மீளாய்வுக்கான திகதி நிச்சயிக்காமல் இருப்பது நான்காவது தவணையை பெற்றுக்கொள்வதில் தாக்கம் செலுத்தும். தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முயற்சித்தால் மீண்டும் பொருளாதார நெருக்கடி தீவிரமடையும் என முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

அநுராதபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை (6) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

பொருளாதார மீட்சிக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்த தீர்மானங்களை ஜனாதிபதி முன்னெடுப்பது மகிழ்ச்சிக்குரியது. பொருளாதார நெருக்கடிக்கு நிலையான தீர்வு காண்பதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம்.

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான விசேட தூதுக்குழுவினர் கடந்த வாரம் நாட்டுக்கு வருகை தந்து ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்கள். இதன்போது மூன்றாம் மீளாய்வுக்கான திகதி நிச்சயிக்கப்படவில்லை.இவ்வாறான நிலையில் நான்காம் தவணையை பெற்றுக் கொள்வதில் பாதிப்பு ஏற்படும்.

சர்வதேச நாணய நிதியத்தின் நான்காம் தவணையாக 300 அல்லது 330 மில்லியன் டொலரை பெற்றக் கொள்ள ஆரம்பத்தில் தீர்மானிக்கப்பட்டது. மூன்றாம் தவணை மீளாய்வு தாமதிக்கப்பட்டால் அடுத்தக்கட்ட தவணையை பெற்றுக் கொள்வதில் பாதிப்பு ஏற்படும்.

தேர்தல் காலத்தில் பொருளாதாரத்துடன் மறுசீரமைப்புக்காக எடுத்த தீர்மானங்களை மறுசீரமைப்பதாக குறிப்பிட்ட வாக்குறுதிகளை செயற்படுத்தினால் நாட்டில் மீண்டும் பொருளாதார நெருக்கடி தோற்றம் பெறும் என்பதை அரசாங்கம் கவனத்திற் கொள்ள வேண்டும் என்றார்.

Related posts