சிவகார்த்திகேயனுக்கு விலை உயர்ந்த பரிசளித்த விஜய்!

‘தி கோட்’ படத்தில் நடித்ததற்காக சிவகார்த்திகேயனுக்கு விலையுயர்ந்த கைக்கடிகாரம் ஒன்றை பரிசாக அளித்துள்ளார் விஜய்.

வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் ‘தி கோட்’. கலவையான விமர்சனங்களாக இருந்தாலும், வசூலில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதில் பிரபுதேவா, பிரசாந்த், சிநேகா, லைலா, ஜெயராம், மோகன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்த இந்தப் படத்துக்கு யுவன் இசையமைத்திருந்தார்.

இந்தப் படத்தின் இறுதிக் காட்சியில் சின்ன ரோலில் நடித்திருந்தார் சிவகார்த்திகேயன். விஜய்க்கும் அவருக்கும் இடையே நடக்கும் உரையாடல் பார்வையாளர்களால் கொண்டாடப்பட்டது. அந்தக் காட்சியில் விஜய் சென்றபின் சிவகார்த்திகேயன் – மோகன் இருவரும் பேசிக் கொள்ளும் காட்சி விரைவில் இணையத்தில் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, ‘தி கோட்’ படப்பிடிப்பின்போதே சிவகார்த்திகேயனுக்கு விலையுர்ந்த கைக்கடிகாரம் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார் விஜய். அப்போது படப்பிடிப்பில் நடந்த விஷயங்களை வீடியோ பதிவாக வெளியிட்டுள்ளார்கள். இதில் சிவகார்த்திகேயனுக்கு சர்ப்ரைஸாக கைக்கடிகாரம் வழங்கியிருக்கிறார் விஜய்.

அந்தப் படப்பிடிப்பு முடிந்தவுடன் விஜய்யின் கேரவேனில் சிவகார்த்திகேயன் சந்தித்த வீடியோ பதிவும் அதில் இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோ பதிவின் மூலம் விஜய் – சிவகார்த்திகேயன் இருவரும் இடையே பெரும் நட்பு உருவாகி இருப்பது தெரிகிறது.

Related posts