மட்டக்களப்பில் வியாழேந்திரனின் வேட்புமனு நிராகரிப்பு!

மட்டக்களப்பில் ஜனநாயக தேசிய முன்னணி கட்சியின் தபால் பெட்டி சின்னத்தில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக மட்டு அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான ஜே.ஜே.முரளிதரன் அறிவித்துள்ளார்.

மட்டக்களப்பு பழைய கச்சேரி மண்டபத்தில் நேற்று11) தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்தவர்களுக்கான வேட்புமனு ஏற்பு மற்றும் சின்னம் வழங்குவதற்கான கூட்டம் இடம்பெற்றது.

இதன் போது வேட்புமனு தாக்கல் செய்த கட்சிகளின் வேட்புமனுக்கள் பரிசீலிக்கும் நடவடிக்கையின் போது ஜனநாயக தேசிய முன்னணி கட்சியின் தபால் பெட்டி சின்னத்தில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் தலைமையில் தாக்கல் செய்த வேட்பு மனுவில் சத்திய கடதாசி இணைக்கப்படாததால் அந்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக தெரிவத்தாட்சி அலுவலகர் அறிவித்தார்.

கடந்த 2015ம் ஆண்டு தேர்தலில் புளொட் சார்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வீட்டு சின்னத்தில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினரான முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், 2020ம் ஆண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறி கட்சி மாறி பொதுஜன பெரமுன கட்சியில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராகி இராஜாங்க அமைச்சரானார்.

இவர் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் 2024ம் ஆண்டு தேர்தலில் போட்டியிடுவதற்காக கொழும்பைச் சேர்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசனின் கட்சியான ஜனநாயக தேசிய முன்னணி கட்சியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தனது தலைமையில் போட்டியிடுவற்காக 8 பேர்களுடன் வேட்பு மனுதாக்கல் செய்திருந்தார்.

இதேவேளை சுயேச்சைக் குழு ஒன்றின் தலைமை வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்யாது போட்டியிடும் 3வது நபர் வேட்புமனு தாக்கல் செய்ததையடுத்து அதன் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதுடன் ஒரு கட்சி 6 சுயேச்சைக்குளுக்கள் உட்பட 7 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

Related posts