ஏ.பீம்சிங் 100-வது பிறந்தநாளில் பிரபு நெகிழ்ச்சி

தமிழில் பல மறக்க முடியாத வெற்றிப் படங்களை இயக்கியவர், ஏ.பீம்சிங். குடும்பப் படங்களை யதார்த்தமாக இயக்குபவர் எனக் கூறப்படும் இவர், சிவாஜி நடிப்பில் மட்டும் 19 படங்களை இயக்கியுள்ளார். அதில்பாசமலர், பாகப்பிரிவினை, படிக்காத மேதை, பாவ மன்னிப்பு உட்பட 15 ‘பா’ வரிசை படங்களும் உண்டு. பீம்சிங்கிற்கு நேற்று நூறாவது பிறந்தநாள். இதையொட்டி, நடிகர் பிரபு நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “அப்பா நடித்த படங்களில் உதவி இயக்குநராக இருந்தவர், பீம்சிங். அவரை ‘செந்தாமரை’ படத்தில் இயக்குநராக அறிமுகப்படுத்தினார். அந்தப் படம் முடிய தாமதம் ஆனாலும், உடனே கால்ஷீட் கொடுத்து ‘அம்மையப்பன்’, ‘ராஜா ராணி’படங்களில் நடித்திருக்கிறார். பிறகு நண்பர்களுடன் இணைந்து தயாரித்து, அவர் இயக்கிய ‘பதி பக்தி’ படத்திலும் நடித்தார்.

மற்ற நடிகர்களை வைத்து படங்கள் இயக்கினாலும் அப்பா நடிப்பில் 19 படங்களை இயக்கினார். ‘சாந்தி’ படத்தின் இந்தி பதிப்பை, சிவாஜி பிலிம்ஸ் தயாரிப்பில் சுனில்தத் நடிப்பில் ‘கவுரி’ என்கிற பெயரில் இயக்கினார். அதே போல ‘பாசமலர்’ படத்தை சிவாஜி பிலிம்ஸ் தயாரிப்பில் இந்தியில் ‘ராக்கி’ என்கிற பெயரில் அசோக்குமார் நடிப்பில் இயக்கினார்.

இப்படி தமிழ்ப் படங்களின் பெருமையை இந்தி் வரை கொண்டு சென்ற பீம்சிங், காலத்தால் அழியாத பல காவிய படங்களைத் தந்தவர். அவருக்கு நூறாவது ஆண்டு என்கிற போது எனக்கு நெகிழ்ச்சியாக இருக்கிறது. அப்பா இருந்திருந்தால் அவரை கொண்டாடி மகிழ்ந்திருப்பார்.

அவரது ஆன்மா தனது படைப்புகள் மூலம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. படைப்புக்கும் அழிவில்லை. படைத்தவருக்கும் அழிவில்லை. கலைஞர்கள் எப்போதுமே மக்களுக்கானவர்கள். அவர்கள் மக்களோடு வாழ்ந்து கொண்டிருப்பார்கள். பீம்சிங் அய்யாவும் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்” என்று கூறியுள்ளார்.

Related posts