கோட்டாபய ராஜபக்ஷ பலவீனமான தலைவர் – எஸ்.எம்.சந்திரசேன

கோட்டாபய ராஜபக்ஷ ஒரு பலவீனமான அரச தலைவர் என்பதால் தான் நாடு வங்குரோத்து நிலையடைந்தது. நாங்களும் இன்று அரசியல் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். எம். சந்திரசேன தெரிவித்தார்.

அநுராதபுரம் பகுதியில் திங்கட்கிழமை (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஜனாதிபதித் தேர்தல் தேசிய மட்டத்தை கொண்டது, பொதுத்தேர்தல் தேர்தல் தொகுதிகளை அடிப்படையாக கொண்டது.

எனது அரசியல் பயணத்தில் அநுராதபுரம் மாவட்டத்துக்கு இயலுமான வகையில் சேவையாற்றியுள்ளேன். ஆகவே அநுராதபுரம் மாவட்ட மக்கள் என்னை இம்முறையும் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்வார்கள்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க விவசாயிகளின் நலனை கருத்திற் கொண்டு தீர்மானங்களை எடுத்தால் அதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவேன்.

ஏனெனில் விவசாய மாவட்டத்தையே நான் பிரதிநிதித்துவப்படுத்துகிறேன். எமது மக்களின் அடிப்படை தேவைகளையே நான் முன்னிலைப்படுத்துவேன்.

கோட்டபய ராஜபக்ஷ ஒரு பலவீனமான அரச தலைவர் என்பதால் தான் நாடு வங்குரோத்து நிலையடைந்தது,அதேபோன்று நாங்களும் இன்று அரசியலில் நெருக்கடிக்குள்ளாகியுள்ளோம்.

எவ்விதமான தூரநோக்கற்ற வகையில் உரம் தொடர்பில் எடுத்த தீர்மானத்தால் தான் நாடு நெருக்கடிக்குள்ளானது. தவறான தீர்மானத்தை அமைச்சரவையில் சுட்டிக்காட்டினேன்.இருப்பினும் எனது கருத்துக்கு மதிப்பளிக்கப்படவில்லை என்றார்.

Related posts