காலஞ்சென்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஐ.எம். இல்யாஸ் எப்போதும் மக்களுக்கு ஏற்படும் அநீதிக்கு எதிராக போராடி வந்தவர். வடக்கில் இருந்து வெளியேற்றுப்பட்டு வந்த முஸ்லிம்களை வரவேற்று அரவணைத்ததுடன் அவர்களை மீள்குடியேற்றவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன், தமிழ் முற்போக்கு கூட்டணியில் தலைவர் மனோகணேசன் மற்றும் காதம் மஸ்தான் ஆகியோர் தெரிவித்தனர்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (24) இடம்பெற்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான டாக்டர் ஐ. எம். இல்யாஸ், ருக்மன் சேனாநாயக்க, ரெஜினோல் பெரேரா மற்றும்சிறினால் டி மெல் ஆகியோர் மீதான அனுதாப பிரேரணை மீது உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தனர்.
இங்கு உரையாற்றிய ரவூப் ஹக்கீம் எம்.பி. தெரிவிக்கையில்,
ஐ.எம். இல்யாஸ் ஆரம்பமாக 1977ஆம் ஆண்டும் முஸ்லிம் ஐக்கிய முன்னணி ஊடாக தமிழர் விடுதலை கூட்டணியில் உதய சூரியன் சின்னத்தில் தேர்தலில் போட்டியிட்டார். இவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பகால உறுப்பினராக இருந்து வந்தவர். இவர் எப்போதும் மக்களுக்கு எதிராக ஏற்படும் அநீதிகளுக்கு எதிராக தைரியமாக குரல் கொடுத்து வந்தவர்.
குறிப்பாக வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து வந்த மக்களை புத்தளம் மண்ணுக்கு வரவேற்று, அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்துகொடுத்தார். அவருக்கு நீண்ட வரலாறு இருக்கிறது. குறிப்பாக புத்தளம் மக்களின் உப்பு போராட்ட பாதயாத்தரை மேற்கொண்வர் என்றார்.
ரிஷாட் பதியுதீன் எம்.எபி. உரையாற்றுகையில்,
ஐ.எம். இல்யாஸ் எப்போதும் போராட்ட உணர்வோடு செயற்பட்டவர். இலங்கையில் மாத்திரமல்லாது வெளிநாடுளிலும் மக்களுக்கு அநீதி இழைக்கப்படடும்போது அதற்கு எதிராக போராடி வந்தவர். புத்தளம் மாவட்ட மக்களுக்காக நல்ல பல போராட்டங்களை மேற்கொண்டவர். குறிப்பாக குப்பைகளை புத்தளத்துக்கு கொண்டு சென்று கொட்டுவதற்கு எதிராக போராட்டம் மேற்கொண்டு அதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுத்தார்.
அதேபோன்று 1990இல் வடக்கில் இருந்து முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு புத்தளத்துக்கு வந்தபோது அந்த மக்களுக்கு அளப்பெரிய சேவைகளை செய்த ஒருவர். குறிப்பாக இடம்பெயர்ந்து வந்த மக்களுக்கு இலவசமாக வைத்திய சேவையை முன்னெடுத்துவந்தார். மேலும் ஈரான் இலங்க நற்புறவு சங்கத்தின் தலைவராக இருந்து இரு நாடுகளுக்கிடையில் நல்ல பல சேவைகளை மேற்கொண்டு வந்வர் என்றார்.
மனோகணேசன் எம்.பி. கூறுகையில்,
1994இல் யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக இந்த சபைக்கு வந்து ஐ.எம். இல்யாஸ் தமிழ் முஸ்லிம் மக்களின் ஐக்கியத்தின் அடையாளமாக செயற்பட்டு வந்தவர். அன்று முஸ்லிம் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு சாட்சியமாக இருந்தவர். அந்த அநீதியை மனதில்வைத்துக்கொண்டு செயற்படாமல் மறந்துபோன ஐக்கியத்தை மீண்டும் ஏற்படுத்துவதற்கு செயற்பட்டவர். எனவே எமது கட்சி சார்ப்பாக அவரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த கவலையை தெரிவித்துக்கொள்கிறோம் என்றார்.
காதர்மஸ்தான் எம்.பி தெரிவிக்கையில்,
ஐ.எம். இல்யாஸ் அரசியலுக்குள் வருவதற்கு முன்னர் பல சமூக சேவைகளை செய்துவந்தவர். அவரின் குடும்பத்தினரும் அவ்வாறே இருந்து வருகின்றனர். குறிப்பாக இடம்பெயர்ந்த மக்களின் மீள் குடியேற்றத்துக்காக முன்னின்று செயற்பட்டவர்.
ஐ.எம். இல்யாஸ் புத்தத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர் வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து வந்த மக்களுக்கு செய்த சேவை காரணமாக, அவர் யாழ்,. மாவட்டத்தில் பாராளுமன்ற தேரதலில் போட்டியிட்டபோது அந்த மக்கள் அவரை வெற்றிபெறச்செய்து பாராளுமன்றத்துக்கு அனுப்பினார்கள். அவர் வைத்தியராக இருந்து பல சேவைகளை புத்தளம் மக்களுக்கு செய்துவந்ததுபோன்று அவரது குடும்பத்தினரும் அவ்வாறு பல் சேவைகளை செய்து வருபவர்களாகும்.
எனவே அவருக்கு ஜன்னதுல் பிர்தெளஸ் எனும் உயரிய சுவர்க்கம் கிடைக்க பிராத்திக்கிறேன் என்றாா்.