பட்டதாரிகளை ஆசிரியர் தொழிலுக்கு இணைத்துக்கொள்ள தடையாக இருப்பது, உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டுவரும் வழக்காகும். அடுத்த வழக்கு விசாரணையின்போது வெற்றிடங்களை நிரப்புவதற்கு எங்களுக்கு அனுமதி கிடைத்தால் உடனடியாக அதுதொடர்பில் செயற்படுவோம். இந்த உண்மையை தெரிந்துகொள்ளாமல் நாங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என தெரிவிப்பது முறையற்றதாகும் என பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (18) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வேலையற்ற பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பு வழங்குவதற்கு அரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கை தொடர்பில் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
பிரமதர் தொடர்ந்து பதிலளிக்கையில்,
வேலையற்ற பட்டதாரிகளுக்கு எமது தேர்தல் விஞ்ஞாபன கொள்கை பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதன் பிரகாரமே நாங்கள் தொழிலுக்கு இணைத்துக்கொள்ளும் நடவடிக்கையை மேற்கொள்கிறோம்.
அதற்கு என ஒழுங்கு விதிகள் இருக்கின்றன. கடந்த அரசாங்கங்களில் போன்று எந்தவித முறைமையும் இல்லாமல் உயர்ந்தவரா குட்டையானவரா என பார்த்து நாங்கள் தொழில் வழங்குவதில்லை.
அதற்கு என ஒரு முறை இருக்கிறது. அரச சேவை ஆணைக்குழு வழங்கும் தீர்மானங்களுக்கு இணங்கி, ஒரு கொள்கையின் பிரகாரமே தொழில் வழங்குகிறோம்.
அதன் பிரகாரம் தொழில் வெற்றிடம் காணப்படும் துறைகளுக்கு ஆட்களை இணைத்துக்கொள்வதற்கு போட்டிப்பரீட்சை, நேரமுகப்பரீட்சை நடத்தியே இணைத்துக்கொள்கிறோம்.
தற்போது வெற்றிடமாகி இருக்கும் துறைகளுக்கு ஆட்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை இடம்பெற்று வருகிறது. தொழில் வாய்ப்புக்கள் வழங்கியும் இருக்கிறோம். 10ஆயிரம் பேருக்கு தொழில் வழங்கும் நடவடிக்கையை நாங்கள் ஆரம்பித்துள்ளோம்.
அத்துடன் பட்டதாரிகளை ஆசிரியர் தொழிலுக்கு இணைத்துக்கொள்ள தடையாக இருப்பது, உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டுவரும் வழக்காகும். இது எதிர்க்கட்சியினருக்கும் தெரியும்.
அதனால் அவர்கள் கல்வி தொடர்பில் விடயங்களை வெளிப்படுத்தும்போது உண்மையான விடயங்களை தெரிவிக்க வேண்டும். அந்த வழக்கு காரணமாகவே ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப முடியாமல் இருக்கிறது.
பாரியளவில் ஆசிரியர் வெற்றிடங்கள் தற்போதும் காணப்படுகின்றன. 25ஆயிரம் வெற்றிடங்கள் வரை இருந்து வருகின்றன. அதனால் வழக்கு விசாரணையில் வரும் தீர்ப்பின் பிரகாரமே எமக்கு பட்டதாரிகளை இணைத்துக்கொள்ள முடியுமாகி இருக்கிறது.
இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு அமைச்சரவையில் எடுத்த தீர்மானத்தை நாங்கள் சட்டமா அதிபர் ஊடாக நீதிமன்றத்துக்கு அறிவித்திருக்கிறோம்.
அடுத்த வழக்கு விசாரணை ஏப்ரல் ஆரம்பத்தில் இடம்பெற இருக்கிறது. இதன்போது எமது நிலைப்பாட்டை நீதிமன்றத்துக்கு தெரிவிப்போம்.
இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு எங்களுக்கு அனுமதி கிடைத்தால் உடனடியாக அதுதொடர்பில் செயற்படுவோம். அதனையும் நாங்கள் சரியான முறைமையின் பிரகாரமே மேற்கொள்வோம்.
அதனால் எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களை நாங்கள் மேற்கொள்வதில்லை என்ற ஒரு எண்ணப்பாட்டை ஏற்படுத்துவது முறையற்றதாகும் என்றார்.